அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு.



மூலவர்: – பத்ரகாளி
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – அந்தியூர்
மாவட்டம்: – ஈரோடு
மாநிலம்: – தமிழ்நாடு

                  கன்று ஈன்ற பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் அப்பசுவைத் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது, ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்தும் பாலைக் குடித்தது. இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியுற்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய ஒரு பெண்,”நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால் குடித்து மனநிறைவு பெற்றேன். என்னை இவ்விடத்திலேயே நிறுவனம் செய்து வழிபடுக” என்றாள் . அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்குப் பத்ரகாளி என்ற பெயர் சூட்டப்பட்டது.


அருள்மிகு பத்திரகாளி அம்மன்

 பெயர் விளக்கம்: பத்ரம் என்ற சொல் இலை, அழகிய உருவம், பாதுகாப்பு என்ற பொருள்களைத் தருகிறது. பத்ரகாளி என்ற சொல்லுக்கு இலைத்தோடு அணிந்த காளி, அழகிய தோற்றமுடைய காளி, மக்களைப் பாதுகாக்கும் சக்தி என்ற பொருள்கள் உண்டு.
கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள்பாலிக்கிறாள். சுடர் விட்டு பரவும் சுவாலை கொண்ட தலை, மண்டை ஓட்டு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிடனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்) நாகம், மணி, கிண்ணத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறாள். பகைவர்களின் தலைகளை மாலையாக தொடுத்து அதையே மார்புக்கச்சாக கட்டியிருக்கிறாள். மகிடனின் தலையில் கால் வைத்துள்ளதால், நவராத்திரி நாயகியான மகிடாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள். பத்ரகாளியம்மன் ராகுதோடம் போக்குபவள். இங்கு வீரஆஞ்சநேயரின் சன்னதியும் இருப்பதால் சனிதோடம் உள்ளவர்களும் பிரார்த்தனைக்கு வருகின்றனர்.

கனவில் பலன் :
அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் கணவனின் கொடுமை தாங்க முடியாத ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் இரவில் கிணற்றில் குதித்தாள். தூங்கி கொண்டிருந்த பூசாரியின் கனவில் அம்மன் சென்று உடனடியாக இளம்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றக் கூறினாள்.அதன்படி பூசாரி, கிணற்றில் குதித்த இளம் பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றினார். இதை தொடர்ந்து கனவில் வந்து பலன்சொல்லும் அம்மனாக அந்தியூர் பத்திரகாளியம்மன் திகழ்கிறாள். இவளை நினைத்தபடியே உறங்குபவர்களுக்கு அம்பாளே கனவில் வந்து கோரிக்கைகளுக்கு பதில் சொல்வாள் என்ற நம்பிக்கையும், மேலும், குற்றம் செய்பவர்களை இவள் உடனடியாக தண்டிப்பாள் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் இருக்கிறது.

குண்டம் சிறப்பு :
இங்கு நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணம், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல், கல்வி போன்ற விடயங்களுக்கு அம்மன் சிரசில் பூ வைத்து, துவங்கலாமா என வாக்குக் கேட்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர். குறிப்பாக, உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது.

சோம்பல் நீக்கும் குணம் :
சிலருக்கு எந்நேரமும் தூக்கம் வரும். இவர்கள் அந்தியூர் பத்ரகாளியிடம் தீர்த்தம் வாங்கிக் குடித்தால் இத்தகைய சோம்பலான உடல்நிலைக்கு விடிவுகாலம் வரும். அந்தியூர் பத்ரகாளியை வணங்குவதால், எந்த பிரச்னையும் இறுதி முடிவுக்கு வருவதாக நம்பப்படுகிறது. அந்தி என்றால் இறுதி என பொருள்படும். நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கெல்லாம் இறுதியான முடிவை அளிக்கும் பத்ரகாளி, அந்தியூர் என்ற பெயருள்ள ஊரில் இருப்பது மிகவும் பொருத்தம்.
பங்குனி மாதம் குண்டம் திருவிழா, சித்ராபவுர்ணமி, தீர்த்தக்குட விழா, துர்க்காட்டமி (108 சங்கு பூஜை), கார்த்திகை தீபம், நவராத்திரி விழா.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல், போன்ற தொழில்கள் செய்யவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
ராகுவின் அதிதேவதையாக காளி விளங்குவதால், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி திருமணத்தடை விலக கன்னியர்கள், வாலிபர்கள் வேண்டுகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டும் வழிபாடு நடக்கிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை வழங்கும் பத்ரகாளி இங்கே தைரிய லட்சுமி அவதாரமாக இருக்கிறாள்.